

பிரித்தானியாவில், ஶ்ரீலங்கா துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஆக்ரோஷமான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் - 08 /09 / 2024
08/09/24, 11:00
விளையாட்டும் அரசியலும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. அது தமிழர்களின் அரசியலிலும் சரி அல்லது மேற்கத்தைய நாடுகளின் அரசியலிலும் சரி, விளையாட்டினைப் புறக்கணித்தும் அல்லது நாடுகளின் அணிகளைத் தடை செய்தும், தமது எதிர்ப்பினை வரலாற்றில் காட்டி உள்ளார்கள்.
இவற்றில் ஒன்றாகவே, கடைசியாக ரஷ்ய நாட்டில் நடைபெற்ற போட்டிகளில் இருந்து உக்ரைன் நாட்டின் விளையாட்டு அணிகள் விலகும் அளவுக்கு, பாரிய அரசியல் களமாக விளையாட்டு இருந்தது என்பதை நாம் அனைவரும் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

விளையாட்டும் அரசியலும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. அது தமிழர்களின் அரசியலிலும் சரி அல்லது மேற்கத்தைய நாடுகளின் அரசியலிலும் சரி, விளையாட்டினைப் புறக்கணித்தும் அல்லது நாடுகளின் அணிகளைத் தடை செய்தும், தமது எதிர்ப்பினை வரலாற்றில் காட்டி உள்ளார்கள்.
இவற்றில் ஒன்றாகவே, கடைசியாக ரஷ்ய நாட்டில் நடைபெற்ற போட்டிகளில் இருந்து உக்ரைன் நாட்டின் விளையாட்டு அணிகள் விலகும் அளவுக்கு, பாரிய அரசியல் களமாக விளையாட்டு இருந்தது என்பதை நாம் அனைவரும் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
அத்துடன் தென்னாப்பிரிக்காவின் (South Africa) அரசியல் தலைவிதியை மாற்றுவதற்காக, தென்னாபிரிக்காவின் துடுப்பாட்ட அணியை உலக அரங்கில் விளையாட முடியாமல் செய்தமை என்பதுவும் பாரிய அரசியல் எதிரொலிகளை, அன்று சர்வதேச அரங்கில் ஏற்படுத்தியிருந்தது என்பதை உலக மக்கள் அனைவரும் அறிவர்.
அதேபோலதான் ஶ்ரீலங்கா துடுப்பாட்ட அணியினை (கிரிக்கெட்) ஒரு கருவியாகவும் கேடயமாகவும் பயன்படுத்தி, ஈழத் தமிழர்கள் மீதான கொடூர இனப்படுகொலையை மறைக்க, சிங்கள அரசுகள் தொடர்ந்து பலவழிகளில், சர்வதேசத்தை நோக்கிக் கொத்தளிக்கின்றது. மேற்கு நாடுகளும், தமது சனநாயக கடமைகளுள் ஒன்றான, கண்ணியத்தை மறந்து, 2009 இல் நிகழ்ந்த தமிழின அழிப்பிற்கு துணைபோன துரோகத்தை மறைக்க, பல வழிகளில் ஶ்ரீலங்காவின் துடுப்பாட்ட விளையாட்டிற்குத் துணைபோவதன் மூலம், எதேச்சதிகாரமாக மனித உரிமைகள் விடயத்தில் நடந்துகொள்கின்றார்கள் என்பது எமது தமிழ் இனத்தில் அனைவரும் அறிந்த ஆழமான உண்மை!
சில மக்கள் துடுப்பாட்டத்திற்குள் (கிரிக்கெட்) அரசியலை கொண்டு வர வேண்டாம் என்று மேலோட்டமாகப் பேசிவிட்டு கடந்து செல்லுகிறார்கள் ஆனால் ஶ்ரீலங்கா அரசோ துடுப்பாட்டத்தை இராஜதந்திரமாகப் பயன்படுத்தி தொடர் இனவழிப்பை மறைக்கக் கடுமையான முயற்சிகளை தவறான வழியில் மேற்கொள்கின்றது. துடுப்பாட்டத்தின் மூலம் தமது சிங்களப் பௌத்த பேரினவாத மேலாதிக்க அரசுகளின் (Sinhala Buddhist Chauvinist Hegemonic Regimes) இனவாதத்தைத் முற்றிலுமாக மறைப்பதற்காக தான் ஓடிக்கொண்டிருக்கின்றார்கள்!
தமது அரசிற்கு நற்பெயரை எடுக்க வேண்டும் என்று கங்கணம் கட்டித் திரிகிறார்கள். ஶ்ரீலங்கா அணியில் இருக்கும் வீரர்கள் அரசியல்வாதிகள் ஆக மாறுகின்றார்கள், இராணுவ வீரர்கள் துடுப்பாட்ட வீரர்கள் ஆக மாறுகின்றார்கள்.
2009 இல் எங்கள் தமிழ் மக்கள் இனவழிப்பினால் அழிந்துக்கொண்டு இருந்தபோதும் அவர்கள் எந்தவித ஆதங்கமோ அல்லது ஆர்ப்பரிப்போ இன்றி தொடர்ந்தும் சர்வதேச அரங்கில் விளையாடினார்கள். 15 வருடங்களின் பின், இன்றும் கூட மரணித்த மக்களுக்காக ஒரு மெழுகுதிரி ஏற்றக் கூட அவர்கள் தயாராக இல்லை. தமிழ் மக்கள் இறந்தவர்களுக்கு அஞ்சலி செய்யக்கூடாது ஆனால் தமது இராணுவ வெற்றி கொண்டாட்டத்தில் மட்டும் பங்கெடுக்க வேண்டும் மற்றும் இறந்த இராணுவத்திற்கு அஞ்சலி செலுத்தவேண்டும் என்ற போர்வையில் தாயகத்தில் தொடர்ந்தும் துன்புறுத்தப்படுகிறார்கள்.
தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால் நாம் ஶ்ரீலங்காவின் துடுப்பாட்ட அணியைப் புறக்கணித்து, ஶ்ரீலங்காவிற்கு எதிராகத் தொடர்ந்தும் புலம்பெயர்தேசங்களில் போராடியே ஆக வேண்டும். ஶ்ரீலங்கா துடுப்பாட்ட அணியைப் புறக்கணித்து, ஈழத் தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்து நடக்கும் இனப்படுகொலையை சர்வதேச அரங்கில் தொடர்ந்தும் பரப்புரை செய்து நீதிக்காகப் போராட வேண்டியது அனைத்துத் தமிழர்களினதும் வரலாற்றுக் கடமையாகும்!
தமிழ் இனப்படுகொலை பற்றி, பிரித்தானியாவில் மீண்டும் தொடர்ந்து பறைசாற்றுவதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமைந்தது. தமிழீழ சுயநிர்ணய அமைப்பும் (Movement for Self Determination of Tamil Eelam) மற்றைய தமிழ் அமைப்புகளும் (Other Diaspora Organisations) இணைந்து ஶ்ரீலங்காவின் துடுப்பாட்ட அணிக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை கச்சிதமாக 08/09/2024 அன்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுத்துள்ளார்கள்.
ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் மனித உரிமைகள் சபையின் (UNHRC) 57 ஆவது கூட்டத்தொடர் 09/09/2024 அன்று திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இன்றைய ஶ்ரீலங்கா துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஆர்ப்பாட்டம் குறிப்பிடத்தக்க அளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகின்றது. இம்முறை ஶ்ரீலங்காவிற்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள தீர்மானமானது முன்னர் கொண்டுவரப்பட்ட 46/1 மற்றும் 51/1 என்ற தீர்மானங்களின் அடிப்படையில், மிகவும் காத்திரமாக அமையவிருப்பதாலும், மற்றும் பொறுப்புக்கூறலை முன்நகர்த்துவதற்கான (Advancing Accountability) முக்கிய முடிவுகள் இடம்பெறவிருப்பதாலும், இந்த ஆர்ப்பாட்டம் மிகவும் முக்கியமான தருணத்தில் நிகழ்ந்தமை சுட்டிக்காட்டப்படுகின்றது.
சுதந்திர விடுதலை வேண்டிப் போராடிய இனம், தமது உரிமைகளை வென்றெடுக்க சகல நடவடிக்கைகளையும், சர்வதேசத்தை நோக்கி எந்தப் பேரமும் இன்றி நகர்த்துகின்றது என்பதை இவ்வார்ப்பாட்டம் மீண்டும் பிரித்தானியாவில் எடுத்துரைத்துள்ளது.
அடுத்து, இந்த மாதம், முக்கியமான தருணமாக தமிழ் இனத்திற்கு அமைகின்றது. அதாவது, ஶ்ரீலங்காவின் 9 ஆவது சனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் 21/09/2024 அன்று, தமிழர் தாயகப் பகுதிகள் உட்பட நாடுமுழுவதும் நடைபெற இருப்பதை அனைவரும் அறிவர். தமிழ் இனத்தின் வரலாற்று இருப்பைத் தாயகத்தில் நிலைநிறுத்த கங்கணம் கட்டிய தமிழ் அரசியற் கட்சிகளும் (Tamil Political Parties) பொதுச்சமூக அமைப்புக்களும் (Tamil Civil Societies) சேர்ந்து, தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பு (Tamil National Common Structure) என்றதோர் கூட்டு அமைப்பை உருவாக்கி, இம்முறை சனாதிபதி தேர்தலில் முக்கிய ஓர் கருப்பொருளாகத் தமிழ்ப் பொது வேட்பாளர் (Tamil Common Candidate) என்ற பெயரில் ஒருவரை நியமனம் செய்துள்ளனர்.
அவர் தான், எமது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. பா. அரியநேந்திரன் ஆவார். அனைத்துத் தமிழ் மக்களும் அவரது தேர்தலின் சின்னமாகிய சங்கை நினைவில் வைத்து, ‘சங்கே முழங்கு தாயகம் எங்கும்’ என்ற தொனிப்பொருளை கருத்தில் கொண்டு, வரவிருக்கும் சனாதிபதித் தேர்தலில் ‘சங்கு’ சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் எனவும், ஆர்ப்பாட்டத்தில் ஒன்றுகூடிய புலம்பெயர் தமிழ்மக்கள் அனைவரும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர்.
அதன் பின்னர், எமது தேசியத்தலைவர் மீதும், மாவீர்ர்கள் மீதும் உறுதிமொழி எடுத்துக்கொண்டு, எமது இனத்தின் தாரகமந்திர உறுதிமொழி உரைத்தலுடன் இப்போராட்டமானது இனிதே நிறைவுபெற்றது.